எண்ணெய் வளத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தில் இருந்து பல்வேறு துறைகளில் விரிவடைய சவுதி அரேபியா முயற்சித்து வரும் நிலையில், அந்நாட்டில் மிகப்பெரிய அளவில் யுரேனியம் தாது இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், சுமார் 11 கோடி டன் யுரேனியம் தாது இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று சவுதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, சவுதி அரேபியா தனது அணுசக்தி திட்டத்தை முன்னெடுத்து வரும் நேரத்தில் வெளியாகியுள்ளது. இதுவரை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை முக்கிய ஆற்றல் ஆதாரங்களாகக் கொண்டிருந்த சவுதி, எதிர்காலத்தில் அணுமின் உற்பத்தியையும் தனது எரிசக்தி கட்டமைப்பில் சேர்க்க திட்டமிட்டு வருகிறது.
அதே நேரத்தில், இந்த 11 கோடி டன் என்பது யுரேனியத்தின் அளவு அல்ல; யுரேனியம் அடங்கிய தாதுவின் மொத்த எடை என்பது முக்கியமானது. அந்த தாதுவில் எவ்வளவு அளவு யுரேனியம் உள்ளது என்பது குறித்து சவுதி அரசு இதுவரை தகவல் வெளியிடவில்லை.
யுரேனியத்தின் செறிவு, தாதுவின் தன்மை, அதை பிரித்தெடுக்கும் திறன், மீட்பு விகிதம் மற்றும் உற்பத்திச் செலவு போன்ற காரணிகளே இந்த வளத்தை வணிக ரீதியாக பயன்படுத்த முடியுமா என்பதை தீர்மானிக்கும். எனவே, தாது அளவு மட்டும் வைத்து சவுதியின் யுரேனியம் வளத்தின் உண்மையான பொருளாதார மதிப்பை தற்போது கணிக்க முடியாது.
Leave a Reply