தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த ஜூலை 18 சனிக்கிழமை இரவு அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பெருவின் தலைநகரான லிமாவிற்கு கிழக்கே அமைந்துள்ள ஜுனின் பிராந்தியத்தின் சுபாகா மாகாணத்தில் இந்த நிலநடுக்கங்கள் மையம்கொண்டிருந்தன.குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவானது. இது பூமியின் அடியில் சுமார் 24 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
சில மணி நேர இடைவெளியில் இரண்டாவது நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆகப் பதிவானது. இது 18 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானது.
இந்த நிலநடுக்கத்தால் 18 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், மண் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட 48க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இதன் காரணமாக 300 க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை இழந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்காலிக கூடாரங்கள் அமைத்துத் தரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதை அறிய மீட்புக் குழுவினர் தொடர்ந்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Leave a Reply