யாழில் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரசார நடவடிக்கை

தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேத்திரனை ஆதரித்து இன்று (09) யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் அதிக வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஊர்காவற்துறை – தம்பாட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகள் முன்னெடுத்து தேங்காய் உடைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, ஆலய பிரதமகுருவிற்கு சம்பிரதாய பூர்வமாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு பின்னர் ஊர்காவற்துறை நகர பகுதியில் பிரசார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை, வடக்கு மாகாண கடற்றொழிலாளர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த தேர்தல் பிரசாரத்தில் அகில கடற்றொழிலாளர் இலங்கை மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா, யாழ்.வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் உப தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம், கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது