தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவினால் இன்று (02) முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு கட்சியின் நாடாளுமன்றக் குழு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் ஒன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் நடத்தப்படவேண்டும் என்பது அரசியலமைப்பின் நியதியாகும்.
இருந்தபோதும், யார் போட்டியிட்டாலும் 51 வீத வாக்குகளை பெறமுடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக அரசியலமைப்பில் உள்ள சில விதிகளை பயன்படுத்தி தேர்தலை பிற்போடுவதற்கான முனைப்புக்கள் குறித்து ஏற்கனவே செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்கும் அல்லது கிடைக்காது என்ற அடிப்படையில் இதற்கான முனைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
அதேநேரம் தமிழ் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறங்கினாலும் ரணிலுக்கு அது பாதகமாகவே இருக்கும்.
எனவே மாற்று யோசனையாக அனைத்துக்கட்சிகளும் இணைந்த தேசிய அரசாங்கம் ஒன்று தொடர்பிலும் யோசனை ஒன்று முன்வைக்கப்படலாம் என்று பேசப்படுகிறது. இந்தநிலையிலேயே இன்று ஐக்கிய மக்கள் சக்தி தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
Leave a Reply