இலங்கைப் பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரி விதித்தது அமெரிக்கா

அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட 60 வர்த்தக நட்பு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரியை அறிவித்துள்ளது.

தற்காலிகமாக அமுல்படுத்தப்பட்டிருந்த 10% உலகளாவிய வரிக் காலம் நிறைவடையும் நிலையில், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் பொருட்களுக்கு 10% வரியையும், சீனா உள்ளிட்ட 38 நாடுகளின் பொருட்களுக்கு 12.5% வரியையும் விதிக்க தீர்மானித்துள்ளது.

கட்டாய உழைப்புத் தடைகள் தொடர்பான சட்டங்கள் சில நாடுகளில் போதுமான அளவில் அமுல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை, இந்தியா, பங்களாதேஷ்,பிரித்தானியா, கனடா, மலேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படவுள்ளது.

அதேவேளை, சீனா உள்ளிட்ட 38 நாடுகளின் பொருட்களுக்கு 12.5% வரி அமுல்படுத்தப்படவுள்ளது.

முன்னதாக, அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில் தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட ‘பரஸ்பர வரிகளை’ அமெரிக்க உயர் நீதிமன்றம் இரத்து செய்ததைத் தொடர்ந்து, 150 நாட்களுக்கு தற்காலிகமாக 10% உலகளாவிய வரி அமுல்படுத்தப்பட்டிருந்தது.

அந்த தற்காலிக வரிக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய வரி முறை அமுலுக்கு வந்துள்ளது. இது டொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய வரி தொடர்பான தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் வெள்ளை மாளிகையின் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகின்றது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *