செம்மணி விவகாரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் விசாரணைகள்!

யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்று வரும் என்புக்கூட்டுப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு எதிர்வரும் புதன்கிழமை (22) சம்பவ இடத்தைப் பார்வையிடவுள்ளது.

செம்மணியில் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழ்வில் இதுவரை 423 மனித என்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு ஒன்று, யாழ்ப்பாணம் செம்மணியின் மிகப்பெரிய என்புக்கூட்டுப் புதைகுழியை எதிர்வரும் புதன்கிழமை அன்று பார்வையிடவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத் தூதர் கார்மென் மொரேனோ தலைமையிலான இத்தூதுக்குழுவில், இத்தாலியத் தூதர் டாமியானோ ஃபிரான்கோவிக், ஜெர்மனித் தூதர் டி பெலிக்ஸ் நியூமன், பிரான்ஸ் தூதர் ரெமி லாம்பர்ட் மற்றும் நெதர்லாந்துத் தூதர் வீபே டி போயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

செம்மணி என்புக்கூட்டுப் புதைகுழி தொடர்பான வழக்கு இந்த வாரம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த தூதுக்குழுவின் பயணத்துக்காக ​​நீதிமன்றத்தின் அனுமதி கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதன்படி தூதுக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 21ஆம் திகதியன்று வடக்குக்குச் செல்லவுள்ளது.

யாழ்ப்பாண நகரின் நுழைவாயிலில் அமைந்துள்ள செம்மணி என்புக்கூட்டுப் புதைகுழி, 1998-ஆம் ஆண்டில் இலங்கைப் படையினரால் பாடசாலை மாணவி கிரிஷாந்தி குமாரசுவாமி, கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு, புதைக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தது.

கடந்த பெப்ரவரியில், ஒரு மயானத்திற்கு அருகில் வேலி அமைப்பதற்காகக் குழி தோண்டியபோது, ​​தொழிலாளர்கள் மனித எச்சங்களைக் கண்டெடுத்ததைத் தொடர்ந்து தற்போதைய அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டு, தொல்பொருள் ஆய்வாளர்கள், நீதி மருத்துவ அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாண சட்டசபையைச் சேர்ந்த சட்ட வல்லுநர்களின் பங்களிப்புடன், நடைபெற்று வரும் இந்த அகழ்வுகள் கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, செம்மணியில் புதைகுழியிலிருந்து இதுவரை 437 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன.

அவற்றில் 428 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அகழ்வின்போது, ​​ஆபரணங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட பல பொருட்களும் மீட்கப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, காணாமல் போனோர் அலுவலகத்தின் தகவல்படி, காணாமல் போனோர் குறித்த மொத்த 22,000 முறைப்பாடுகளில், 6000-க்கும் மேற்பட்டவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *