அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு தலா 11,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், பௌதீக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நவீன அரச சேவையை கட்டியெழுப்புவதற்காக ஒதுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரச சேவையை நவீனத்துவ கலாசாரத்திற்கு கொண்டு வர வேண்டும். அதனை பாதுகாக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பௌதீக வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சீர்குலைந்த அரச சேவையை நவீனமயமாக்குவதற்கு அடுத்த ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கவர்ச்சிகரமான அரச சேவையை உருவாக்குவதற்கு அரசாங்கம் ஒரு அரசியல் அதிகாரசபையாக உறுதி பூண்டுள்ளது.

இதற்காக பொது நிர்வாக அதிகாரிகளின் அர்ப்பணிப்பு எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.