யாழில் விரிவுரையாளரின் அநாகரிகப் பேச்சு: தற்கொலைக்கு முயன்ற மாணவி

யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரியர் மாணவி ஒருவர், அங்கு கடமையாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவரின் அநாகரிகப் பேச்சினால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம்  வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:

குறித்த மாணவி, கல்லூரியின் கழகச் செயற்பாடு ஒன்றுக்காகச் சென்று திரும்பியுள்ளார். அப்போது, விடுதிக்குப் பொறுப்பான பெண் விரிவுரையாளர், மாணவியைப் பார்த்து “எங்கு சென்று வருகிறாய்?” எனக் கேட்டுள்ளார். அதற்கு அம்மாணவி, “கழகச் செயற்பாட்டிற்காகக் கழகத் தலைவர் அழைத்ததால் சென்று வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.

உடனே அப்பெண் விரிவுரையாளர், “அவன் யாருடன் போகச் சொன்னாலும் நீ போவாயா?” என அநாகரிகமான முறையில் திட்டியுள்ளார்.

இதனால் மனவேதனையடைந்த மாணவி, இச்சம்பவம் குறித்துக் கல்லூரி நிர்வாகத்திற்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு அளித்துள்ளார்.

எனினும், கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தீவிர மனவிரக்தியடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாகச் சக மாணவிகளால் அவர் காப்பாற்றப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *