இன பிரச்சினைகளை தீர்க்க கடினமாக உழைத்தவர் சம்பந்தன்! குகதாசன் எம்.பி தெரிவிப்பு

இலங்கையில் இனப் பிரச்சினைகளை தீர்க்க கடினமாக பாடுபட்டு உழைத்தவரே மறைந்த தலைவர் அமரர் இராஜவரோதயம் சம்பந்தன் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

மறைந்த பெருந் தலைவர் இரா.சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று (06)இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

”1976ம் ஆண்டு முதல் 2023 வரை மிகவும் நெருக்கமாக அவருடன் பணியாற்றியுள்ளேன்.

1933 பெப்ரவரி 05ல் இராஜவரோதயனுக்கு இரண்டாவது மகனாக பிறந்த இரா.சம்பந்தன் ஆரம்ப கல்வியை திருகோணமலை புனித மரியால் கல்லூரியில் கற்றார்.

இதனை தொடர்ந்து சூசையப்பர் கல்லூரி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பாடசாலைகளில் கற்று சட்டக் கல்லூரிக்கு 1956 களில் நுழைந்தார். திருகோணமலை மாவட்டத்தில் அப்போது புகழ் பெற்ற சட்டத்தரணியாக விளங்கிய இவர் 1977தொகுதி வாரியான தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

மொத்தமாக கடந்த 32 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளதுடன் இன பிரச்சினைகளை தீர்க்க இலங்கை குடியரசின் முன்னால் கட்சித் தலைவர்கள் ஜனாதிபதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் சுமூகமாக ஈடுபட்டுள்ளதுடன் இந்திய நாட்டு தலைவர்களுடனும் திறம்பட பேச்சுவார்தையில் ஈடுபட்டார். திருகோணமலை என்றால் அது சம்பந்தன் தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இவர் 2015-2018 வரை இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார்.

1987 இலங்கை இந்திய மாகாண சபை ஒப்பந்தம் வடகிழக்கு தொடர்பிலான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளிலும் தனது பதவி காலத்தில் இந்தியாவுடன் சுமூகமான முறையில் தொடர்புபட்டவருமாவார்.”என கூறியுள்ளார்.